பூந்தமல்லியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் ரூபாய்


பூந்தமல்லியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் ரூபாய்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:00 PM GMT (Updated: 22 Sep 2019 8:10 PM GMT)

பூந்தமல்லியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து தானாக வெளிவந்த ரூ.10 ஆயிரம் நேர்மையுடன் ஒப்படைத்த கல்லூரி மாணவர்.

பூந்தமல்லி,

நெல்லையை சேர்ந்தவர் மாடசாமி (வயது 23). இவர், பூந்தமல்லியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து திடீரென கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் வெளியே வந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தார். அதில் ரூ.10 ஆயிரம் இருந்தது. உடனடியாக அந்த பணத்தை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த மாணவர் மாடசாமியை போலீசார் பாராட்டினர்.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந்த யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை சொருகி நீண்டநேரம் ஆகியும் பணம் வராததால், பணம் இல்லை என்று நினைத்து சென்று இருக்கலாம். தாமதமாக அந்த பணம் வெளியே வந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story