குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்கள் அமைக்க சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்கள் அமைக்க சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 8:49 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்கள்அமைக்க குழந்தை இல்லங்கள், சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

தர்மபுரி,

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்கும் திட்டத்தினை தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் தங்காமல் அதன் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்களின் வளாகத்திலோ அல்லது தகுதி வாய்ந்த இடங்களிலோ விளையாட்டு மற்றும் பொழுபோக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தை செயல்படுத்த தகுதிகளைக் கொண்ட குழந்தைகள் இல்லங்கள் தனியாகவோ அல்லது தகுதி வாய்ந்த சேவை நிறுவனங்களுடன் இணைந்தோ செயல்படுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இல்லங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தன்னிறைவு

வங்கி மற்றும் நிறுவனம் தொடர்பான அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலம் செயல்படுத்தி கொண்டிருக்க வேண்டும். கோர்ட்டில் எந்தவிதமான குற்றவியல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்ககூடாது. இந்த திட்டத்தினை செயல்படுத்த நிதி நிலையில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தை தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த குழந்தை இல்லங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி என்றமுகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story