திருப்பத்தூர் அந்தனேரி ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


திருப்பத்தூர் அந்தனேரி ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Sep 2019 10:15 PM GMT (Updated: 22 Sep 2019 10:32 PM GMT)

திருப்பத்தூரில் உள்ள அந்தனேரி ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள அந்தனேரி ஏரி 1.30 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரியாகும். இந்த ஏரி முன்பு திருப்பத்தூர் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கியது. இந்த ஏரி பொது பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் நீர்பிடிப்பு பகுதி தூர்ந்துள்ளது.

இதனால் ஆண்டுதோறும் மழை காலத்தில் இந்த ஏரியில் உள்ள கொள்ளளவு நீரை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த கோடை காலத்தின் போது, ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டதால், மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஏரியின் மதகு பகுதியில் உள்ள கரைகள் பலப்படுத்தப்படவில்லை. இந்த பணிகள் நடைபெறாமல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி முட்புதர்களாக காட்சியளிக்கிறது. குறிப்பாக இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது.

இந்த ஏரி தர்மபுரி ரோடு பகுதியில் இருந்து சேலம் செல்லும் ரோடு பகுதி வரை பரந்து விரிந்து உள்ளது. திருப்பத்தூர் -தர்மபுரி, கிருஷ்ணகிரி சாலை இணைப்பு பகுதியில் சில பகுதிகளை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியுள்ளனர்.

இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பை ஆகியவை ஏரியில் விடப்படுவதால் ஏரி மாசடைந்து வருகிறது.

தனியார் சிலர் லாரிகளில் குப்பை கழிவுகளை கொண்டு வந்து இந்த ஏரியில் கொட்டுகின்றனர். இதுமட்டுமின்றி ஆடு, மாடு கழிவுகள், கட்டிடங்கள் இடிக்கப்படும் கழிவுகள் ஏரிகளின் கரையோரம் கொட்டப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏரியின் நடுவில் சுடுகாடு அமைத்து தினமும் பிணங்கள் புதைக்கப்பட்டும், கல்லறைகள் கட்டப்பட்டும், போகும் வழியில் துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால் ஏரியில் நிலத்தடி நீர் நஞ்சாக மாறிய அவலம் உள்ளது. முக்கிய வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால், மழைகாலத்தில் கால்வாய்களில் நீர்வரத்து தடைபட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தும், ஏரியில் சிறிதளவு நீர் கூட தேங்கவில்லை.

எனவே இந்த ஏரியை தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தவும், புதர்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல், மாடப்பள்ளி செல்லும் வழியில் உள்ள பெரியஏரியும் இதே நிலையில் தான் உள்ளது. இதனையும் சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story