நாகர்கோவில்–களியக்காவிளை இடையே குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையால் மக்கள் அவதி கலெக்டர் அலுவலகத்தில் ச.ம.க. மனு


நாகர்கோவில்–களியக்காவிளை இடையே குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையால் மக்கள் அவதி கலெக்டர் அலுவலகத்தில் ச.ம.க. மனு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 3:28 PM GMT)

நாகர்கோவில்–களியக்காவிளை இடையே குண்டும், குழியுமான தேசிய நெடுஞ்சாலையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ச.ம.க.வினர் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) கட்சி மாவட்ட செயலாளர் பால்ராஜ் திரளானவர்களுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், “குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன. இங்கு பெண்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும் பெண்கள் நின்றுகொண்டே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே கடையில் வேலை செய்யும் பெண்கள் உட்கார இருக்கை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

சாலை சேதம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண்விக்டர்தாஸ் அளித்த மனுவில், “நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் குளிர்சாதன எந்திரம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கு பதிலாக ஜன்னல்களை திறந்து வைத்திருக்கிறார்கள். மேலும் கழிவறைகள் சரியாக சுத்தம் செய்யப்படவில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

சமத்துவ மக்கள் கட்சி குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஷாஜிகுமார் நிர்வாகி களுடன்  வந்து அளித்த மனுவில், “நாகர்கோவில்–களியக்காவிளை இடையே தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் ஆம்புலன்ஸ் சென்றுவர மிகவும் கஷ்டமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் குளச்சல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேர மருத்துவரை நியமிக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நிவாரண நிதி

மக்கள் குறை தீர்க்கும் நாளில் மொத்தம் 463 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வருவாய் அதிகாரி ரேவதி கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

முன்னதாக கூட்டத்தில், கடந்த 16–6–2019 அன்று கடல் அலையில் சிக்கி பலியான கல்குளம் தாலுகா லெட்சுமிபுரத்தை சேர்ந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வருவாய் அதிகாரி ரேவதி வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல்காசீம் மற்றும் அனைத்துத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story