சிறுமூர் பள்ளி கட்டிடத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது


சிறுமூர் பள்ளி கட்டிடத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 23 Sep 2019 10:30 PM GMT (Updated: 23 Sep 2019 9:53 PM GMT)

சிறுமூர் பள்ளி கட்டிடத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது.

ஆரணி,

ஆரணியை அடுத்த சிறுமூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள 2 கட்டிடங்களும் பாழடைந்து காணப்படுகிறது. அடிக்கடி மேல்தளத்திலிருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. எனவே பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கல்வித்துறைக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் பள்ளியை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதேபோல் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், விஷ்ணு பிரசாத் எம்.பி.ஆகியோரிடமும் பொதுமக்கள், ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து ‘தினத்தந்தி’யிலும் நேற்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல பள்ளியை திறக்க ஆசிரியர்கள் சென்றபோது ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு விழுந்திருந்ததையும் அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு புதியதாக கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story