கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; வேளாண்மை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Sep 2019 10:30 PM GMT (Updated: 24 Sep 2019 1:02 PM GMT)

கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:–

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் பல இடங்களில் நடைபாதை சரியில்லாமல் உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடிவேரியில் இருந்து பவானி வரை செல்லும் பவானி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கான ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மழைநீரை சேமிக்கும் இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பல்வேறு இடங்களில் உள்ள கொப்பு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தினால் விவசாய பணிக்கான ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டு உள்ளது. வேளாண்மை பணிகள் நடக்கும்போது இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குரங்கன் ஓடையில் 2 இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. விரைவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கூறி வருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டால், அரசு அறிவித்த விவசாய நலத்திட்டங்கள் வழங்குவது நிறுத்தப்படும். எனவே சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்தோ அல்லது அதன் பிறகோ உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.25 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

மொடக்குறிச்சி தாலுகா நஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் பெரும்பள்ளம் ஓடை பாசனத்தை நம்பி 100–க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அங்குள்ள புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 96 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன.

பல தலைமுறைகளாக நாங்கள் களமாக பயன்படுத்தி வந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்தோம். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இதில் உரிய விசாரணை செய்து 8 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நாங்கள் கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். இதைத்தொடர்ந்து உடனடியாக பணிகளை நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாங்கள் விவசாய விளை பொருட்களை உலர வைப்பதற்காக பயன்படுத்தி வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

அதற்கு பதில் அளித்து பேசிய ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் கூறுகையில், ‘‘வாய்க்கால் புறம்போக்கில் குடியிருப்போரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அகற்றப்படும் நபர்களுக்கு குடியிருப்பு வசதிக்காக கொடிமுடி பகுதியில் 200 வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை பெய்து வருவதால் பாசனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல வழிவகை செய்யப்படுகிறது. குரங்கன்பள்ளம் ஓடையில் ரூ.50 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட உள்ளது’’, என்றார்.

Next Story