காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2019 11:00 PM GMT (Updated: 24 Sep 2019 5:49 PM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகத்தில், மைசூரு மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணையும், மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையும் முழு கொள்ளளவை ஏற்கனவே எட்டி விட்டன. தற்போது இந்த இரு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 10 ஆயிரத்து 624 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8,700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் கர்நாடக மற்றும் தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை முதல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

போலீசார் அறிவுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story