செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்: அத்தையை கொன்று உடலை எரித்த தொழிலாளி கைது


செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்: அத்தையை கொன்று உடலை எரித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 24 Sep 2019 10:15 PM GMT (Updated: 24 Sep 2019 7:09 PM GMT)

கோத்தகிரி அருகே செலவுக்கு பணம் தராததால் அத்தையை கொன்று, அவரது உடலை எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் கிரு‌‌ஷ்ணமூர்த்தி(வயது 45). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரு‌‌ஷ்ணமூர்த்தியின் மனைவி இறந்து விட்டார். அதன்பின்னர் அவர் தனது மகனை, மனைவியின் சகோதரர் பராமரிப்பில் விட்டுவிட்டார்.

மேலும் கிரு‌‌ஷ்ணமூர்த்தி 2-வது திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு 2-வது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனது தந்தையின் தங்கையான விசாலாட்சி(66) என்பவரது பராமரிப்பில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வாழ்ந்து வந்தார். விசாலாட்சி தேனாடு ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது அத்தையான விசாலாட்சியிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் விசாலாட்சி பணம் தர மறுத்துவிட்டு, தூங்க சென்றுவிட்டார். உடனே ஆத்திரம் அடைந்த கிரு‌‌ஷ்ணமூர்த்தி, விசாலாட்சியின் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்து விட்டார். பின்னர் உடலை மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது தனது அத்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கிரு‌‌ஷ்ணமூர்த்தி அவர்களிடம் நாடகமாடினார். இருப்பினும் அவர் மீது சந்தேகம் கொண்ட அக்கம்பக்கத்தினர் சோலூர்மட்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கிரு‌‌ஷ்ணமூர்த்தியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது விசாலாட்சியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, அவரது உடலை மண் எண்ணெய் ஊற்றி எரித்ததை கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விசாலாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செலவுக்கு பணம் தர மறுத்த அத்தையை தொழிலாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story