கீரமங்கலம் பகுதியில் சித்த மருத்துவத்திற்காக சேகரிக்கப்படும் நத்தை ஓடுகள்


கீரமங்கலம் பகுதியில் சித்த மருத்துவத்திற்காக சேகரிக்கப்படும் நத்தை ஓடுகள்
x
தினத்தந்தி 24 Sep 2019 10:30 PM GMT (Updated: 24 Sep 2019 8:46 PM GMT)

கீரமங்கலம் பகுதியில் சித்த மருத்துவத்திற்காக நீர்நிலைகளில் ஒதுங்கியுள்ள நத்தை ஓடுகளை சேகரித்து வருகின்றனர்.

கீரமங்கலம்,

பழங்காலத்தில் உணவே மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் நாகரீக வாழ்க்கை என்று மருந்தாக பயன்பட்டு வந்த உணவு பொருட்களை ஒதுக்க தொடங்கி விட்டனர். ஆனால் தற்போது மீண்டும் பழைய முறை உணவுகளை தேடி செல்கின்றனர் இளைய தலைமுறையினர்.

மழைக்காலம் தொடங்கி, குளம், ஏரிகளில் தண்ணீர் நிறைந்தவுடன் வயல்களில் விவசாயம் தொடங்குவது வழக்கம். காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வரும் போது, அன்றைய உணவுக்காக வயல்களில், குளங்களில் நண்டுகள், நத்தைகளை சேகரித்து கொண்டு குழம்பு வைத்து சாப்பிட்டனர் விவசாயிகள். இந்த நத்தைகள், நண்டுகள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணமுடையதாக இருந்ததால் விவசாயிகளுக்கு எந்த நோய்களும் வரவில்லை.

நத்தை ஓடுகள் சேகரிப்பு

தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகள் குடிமராமத்து இல்லாத காரணங்களால் குளம், ஏரிகளில் தண்ணீர் இன்றி விவசாயம் குறைய தொடங்கியது. அதன் பிறகு வயல்களில் நத்தை, நண்டு சேகரித்து சாப்பிடுவதும் குறைந்த போது, மேலும் வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதால் அது போன்ற உயிரினங்களும் குறைந்துவிட்டது. இந்த நிலையில் தான் தற்போது பல நோய்களுக்கு மருந்தாக நத்தைகள் உள்ளது என்பதை அறிந்து, 25 நத்தைகள் ரூ.50, ரூ.100-க்கு விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.தற்போது சித்த மருத்துவம் படித்துள்ள மருத்துவர்கள் கீரமங்கலம் அருகில் உள்ள பாலகிரு‌‌ஷ்ணபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில், அணைக்கட்டுகளில் பல வருடங்களாக இயற்கையாக செத்து மடிந்த நத்தை ஓடுகள் மற்றும் நத்தையின் தலை, கால் ஓடுகளை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து சித்த மருத்துவர்கள் கூறுகையில், நத்தை ஓடுகளில் பல நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது. இதனால் ஓடுகளை சேகரித்து வருகிறோம் என்றனர்.

Next Story