கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தி.மு.க.வினர் முற்றுகை விவசாயிகள் பங்கேற்பு


கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தி.மு.க.வினர் முற்றுகை விவசாயிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 3:26 PM GMT)

கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சம்பகுளம், பெருங்குளம், அத்திகடை மற்றும் தெங்கம்புதூர் கால்வாய்கள் (சானல்கள்) தூர்வாரப்படாமல் உள்ளதால் தான் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடை வரம்பு வரை செல்லவில்லை. எனவே கால்வாய்களை தூர்வாரக்கோரி தி.மு.க. சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கடந்த 6–ந் தேதி புதூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அப்போது, 15 நாட்களுக்குள் கால்வாய்களை தூர்வாரி கடைவரம்பு வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும், ஆனால் அதன்படி கால்வாய்கள் தூர்வாரப்படாததை கண்டித்து நேற்று தி.மு.க.வினர் நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகேஷ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், வக்கீல் சரவணன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது மழை பெய்து கொண்டே இருந்தது. எனினும் மழையை பொருட்படுத்தாமல் போராட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை அலுவலக வாசலில் அமர்ந்தபடி அதிகாரிகளை கண்டித்து தி.மு.க.வினர் கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

சாகும்வரை...


இதுபற்றி ஆஸ்டின் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

 புதூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது 15 நாட்களுக்குள் கால்வாய்களை தூர்வாரிவிடுவோம் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். எனினும் கடைவரம்பு வரை தண்ணீர் கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவதாகவும், இன்னும் 8 நாட்களில் முழுவதும் தூர்வாரப்பட்டு கடைவரம்புக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே இதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டுள்ளோம். ஆனால் 8 நாட்களுக்குள் தூர்வாரப்படவில்லை என்றால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தி.மு.க. சார்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story