நெகமம் அருகே, தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் சாவு


நெகமம் அருகே, தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் சாவு
x
தினத்தந்தி 25 Sep 2019 10:00 PM GMT (Updated: 25 Sep 2019 4:59 PM GMT)

நெகமம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இ்ந்த சம்பவம் குறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெகமம்,

கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த செங்குட்டைப்பாளையம் உத்தமகாந்திநகரை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் விஜய் (வயது22). அதே பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பிரசாந்த் (24). இவர்கள் தோட்ட வேலை செய்து வந்தனர். நேற்று இவர்கள் இருவரும் அருகே உள்ள எஸ்.அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு வேலை செய்ய தொடங்கினர். பின்னர் மதியம் இருவரும் சாப்பிட முயன்றனர்.

அதற்காக அவர்கள் கை கழுவுவதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றனர். அந்த தொட்டி 30 அடி ஆழம் கொண்டதாக இருந்துள்ளது. முதலில் கை கழுவுவதற்கு பிரசாந்த் அந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி உள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால்தவறி தொட்டிக்குள் விழுந்து விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜய் தொட்டிக்குள் எட்டி பார்த்தார். அப்போது பிரசாந்த் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார்.

இதனை பார்த்ததும் விஜய் தொட்டிக்குள் குதித்து பிரசாந்தை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்த நிலையில் இருவருமே தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து சக தொழிலாளர்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீர் தொட்டியில் இறங்கி 2 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story