இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு


இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 25 Sep 2019 9:30 PM GMT (Updated: 25 Sep 2019 6:51 PM GMT)

இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் சித்திரபுத்திர நாயனார் (வயது 69), இவர் நேற்று முன்தினம் மறைமலைநகர் அண்ணா சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சித்திரபுத்திர நாயனார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அம்பத்தூரில் இருந்து பழைய சிமெண்டு ஓடுகளை ஏற்றிக் கொண்டு கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான வேற்காடு பகுதியில் உள்ள பழைய சிமெண்டு ஓடுகள் விற்பனை செய்யும் கடைக்கு நேற்று இரவு ஒரு மினி லாரி வந்தது. அந்த கடையின் வாசலில் லாரியை அதன் டிரைவர் திருப்பும்போது அந்த பகுதியில் இருந்த கால்வாயில் லாரியின் ஒரு புறத்தில் உள்ள சக்கரங்கள் இறங்கியதால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியின் மேல் அமர்ந்து இருந்த 3 கூலித்தொழிலாளர்களில் 2 பேர் மீது பழைய சிமெண்டு ஓடுகள் சரிந்து விழுந்தன. இதில் கூலித்தொழிலாளியான பீகாரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பூஷன் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நபரான பலச்சவுத்திரி(22) என்பவர் லேசான காயங்களுடன் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். விபத்துக்கு காரணமாக மினி லாரி டிரைவர் மற்றும் அதன் கிளனர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story