மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் தடுப்பணை வந்தது காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் தடுப்பணை வந்தது காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 8:41 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயனூர் தடுப்பணைக்கு வந் தது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரூர்,

கர்நாடக மாநிலத்தில் அங்குள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிரு‌‌ஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

இந்த நிலையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி ஆற்றில் தண்ணீர் பரந்து விரிந்து ஓடுகிறது. இந்த நிலையில் கூடுதலாக தண்ணீர் திறப்பால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற் பட்டுள்ளது.

மாயனூர் தடுப்பணை

மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு உபரி நீர் 40 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு நேற்று வந்தது. மாயனூர் தடுப்பணைக்கு நேற்று காலை நீர்வரத்து 19 ஆயிரத்து 100 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து முக்கொம்பு மேலணைக்கு 17 ஆயிரத்து 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்து கொள்ளும்படியும் கலெக்டர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொலைபேசி எண்

இதேபோல காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் இறங்கி குளிப் பதையோ, மீன் பிடிப் பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறும், வெள்ள அபாயம் ஏற்பட்டால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படியும் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பிலும், தண்டோரா மூலமும், ஒலிப்பெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story