கடந்த 6 மாதத்தில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.100 கோடி அபராதம் வசூல் - மத்திய ரெயில்வே தகவல்


கடந்த 6 மாதத்தில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.100 கோடி அபராதம் வசூல் - மத்திய ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 25 Sep 2019 11:00 PM GMT (Updated: 25 Sep 2019 8:43 PM GMT)

மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்குவது ரெயில் போக்குவரத்து ஆகும். இருப்பினும் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது ரெயில்வே துறைக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

மும்பை, 

டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில்களில் சோதனை நடத்தி விதிமுறையை மீறி பயணம் செய்பவர்களுக்கு அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்தநிலையில் மத்திய ரெயில்வே தலைமை செய்தி தொடர்பாளர் சிவாஜி சுதார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 24-ந்தேதி வரை டிக்கெட் பரிசோதனை நடவடிக்கையின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. டிக்கெட் பரிசோதனை மூலம் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.100 கோடியே 29 லட்சமாகும்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வசூலான ரூ.87.98 கோடி வருவாயுடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் அதிகமாகும். விதிமுறை மீறி பயணம் செய்தவர்கள் மீது போடப்பட்ட 19 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் மூலம் இந்த பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 17 லட்சத்து 42 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story