மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், தெற்காசிய மீனவர் தோழமை மனு


மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், தெற்காசிய மீனவர் தோழமை மனு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:45 PM GMT (Updated: 26 Sep 2019 4:08 PM GMT)

மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில்,

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில், தெற்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார், ஆழ்கடல் மீனவர் சங்கத் தலைவர் சேசு அடிமை, புனித தோமையார் விசைப்படகு சங்க தலைவர் நிகோலஸ், குமரி தமிழ்வானம் நிறுவனத் தலைவர் சுரேஷ் மற்றும் மீனவ பிரதிநிதிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை மீனவர்களிடம் இருந்து அபகரிக்கும் தேசிய மீன்வள கொள்கை 2019–ஐ கைவிட வேண்டும். பன்னாட்டு வணிக மீன்பிடிக் கப்பல்களுக்கான இந்த சட்டத்தை சாதாரண மீன்பிடி படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் மேல் திணிக்கக்கூடாது.

மறுபரிசீலனை

தலைமுறை, தலைமுறையாக ஆழ்கடலில் மீன்பிடிக்கின்ற பாரம்பரிய மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பிற நாடுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை ஊக்குவிப்பது போன்று மத்திய அரசும் தனது மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதோடு, பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வந்தவர்கள் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சரும், முதல் மீன்வளத்துறை அமைச்சருமான லூர்தம்மாள் சைமனின் 108–வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்தை கையில் ஏந்திய படி வந்திருந்தனர்.


Next Story