தஞ்சை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27 லட்சம் மோசடி; செயலாளர் கைது


தஞ்சை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27 லட்சம் மோசடி; செயலாளர் கைது
x
தினத்தந்தி 26 Sep 2019 11:15 PM GMT (Updated: 26 Sep 2019 6:55 PM GMT)

தஞ்சை அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27 லட்சம் மோசடி செய்த செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ளது சின்னமுத்தாண்டிபட்டி. இங்குள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பூதலூரை அடுத்த நத்தம்பாடிபட்டியை சேர்ந்த முருகன்(வயது 51) செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த கடன் சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.27 லட்சத்து 40 ஆயிரத்து 991 முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் தயாளன் அமல்ராஜ் தணிக்கை செய்தார். அப்போது முறைகேடு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

செயலாளர் கைது

இது குறித்து அவர், செயலாளர் முருகன் மீது தஞ்சை மாவட்ட வணிக குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டுகள் ரெத்தினகுமார், அசோக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story