சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலத்தை திரும்ப ஒப்படைக்கக்கோரி விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதம்


சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலத்தை திரும்ப ஒப்படைக்கக்கோரி விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:00 PM GMT (Updated: 26 Sep 2019 8:18 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை, அச்சங்க விவசாயிகள் எழுந்து நின்று பேசுகையில், வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக ஆந்திராவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், இந்திய அரசின் பெருவணிகத் துறையும் இணைந்து தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திருமாந்துறை, பென்னக்கோணம், எறையூர், சின்னாறு, அயன்பேரையூர், பெருமத்தூர், பெருமத்தூர் நல்லூர், லப்பைகுடிக்காடு, மிளகாநத்தம், டி.கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை ஒரு ஏக்கருக்கு லட்சம் கணக்கில் ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாகவும், வீடு கட்டுவதற்கு காலிமனை தருவதாகவும் கூறினார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனம் எந்தவித தொழிற்சாலைகளையும் இதுவரை உருவாக்கவில்லை. சுமார் 12 ஆண்டுகள் ஆகியும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள்.

வாக்குவாதம்

எனவே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கையகப்படுத்திய நிலங்களை அரசும், தனியார் நிறுவனமும் அந்தந்த நில உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 30-ந் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நிலம் கைப்பற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலம் கொடுத்த விவசாயிகளை திரட்டி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். மேலும் இது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்துவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் வராததால், அந்த கூட்டத்தை புறக்கணித்து வந்தோம். ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி இது தொடர்பாக கலெக்டர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்தனர். முன்னதாக பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமே‌‌ஷ் பேசுகையில், செட்டிகுளம் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் நிலையத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்வதாக தெரிகிறது. அதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி, அங்கு தமிழக தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் வங்கிகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் விவசாய நகை கடன் வழங்கப்படாது என்று கூறப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், அவர்கள் சரியாக பதில் கூறுவதில்லை என்றார்.

தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய- மாநில அரசுகள் பங்களிப்போடு 100 சதவீதம் மானியத்தில் எண்ணெய் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். எறையூர் சர்க்கரை ஆலை-செந்துறை சாலையில் போக்குவரத்து வசதி தொடங்கப்பட வேண்டும் என்றார்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு, தங்களது வயல்களில் பயிரிட்ட கரும்புகளை வெட்டி வழங்கிய விவசாயிகளுக்கு 2015-16 மற்றும் 2016-17 ஆகிய நிதி ஆண்டுகளில் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.28 கோடியையும், இந்த ஆண்டிற்கு அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்கினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், கொட்டரை நீர்த்தேக்க திட்டம் செயல்படுத்திட அரசாணை பிறப்பித்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நீர்த்தேக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தியவர்களுக்கான உரிய இழப்பீடு வழங்கவில்லை. பாசன வாய்க்காலுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை பெறவில்லை. கொட்டரை நீர்த்தேக்க திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஏரிகளை தூர்வார வேண்டும்

திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் வரதராஜன் பேசுகையில், பூலாம்பாடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சொந்த கட்டிடம் அரசு கட்ட வேண்டும். பூலாம்பாடியில் உள்ள கீரவாடி ஏரி, பொன்னேரி, சித்தேரி ஆகிய 3 ஏரிகளை தூர்வார குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி தூர்வார வேண்டும் என்றார்.

பாசன விவசாயிகள் சங்க விவசாயிகள் பேசுகையில், பெரியேரி, சித்தேரி ஆகிய ஏரிகளின் நீர்வரத்து வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்டினால், அந்த ஏரிகளுக்கு நீர் வரத்து நின்று விடும். எனவே ஏரிகளின் நீர்வரத்து வாய்க்கால்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டாம் என்றனர்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை அலுவலர்கள், மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story