அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் - பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி


அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் - பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி
x
தினத்தந்தி 28 Sep 2019 10:45 PM GMT (Updated: 28 Sep 2019 5:31 PM GMT)

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் கூறினார்.

ஈரோடு,

தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளரும், பா.ஜனதா அறிவுசார் பிரிவின் மாநில அமைப்பாளரும், இந்திய பொருளாதார மற்றும் கலாசார மையத்தின் இயக்குனருமான பி.கனக சபாபதி நேற்று ஈரோடு வந்தார்.அவருக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கும், கிராம வளர்ச்சிக்கும், ஏழை-எளியவர்களின் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறது. விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கட்டுமான துறை வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடியில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்தது. தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா? என்பதை கட்சியின் மேலிடம் அறிவிக்கும். எங்கள் கட்சியின் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் மாநில தலைவர் நியமிக்கப்பட இருக்கிறார்.

இவ்வாறு மாநில செய்தித்தொடர்பாளர் பி.கனகசபாபதி கூறினார்.

பேட்டியின் போது மாநில பிரசார அணி தலைவர் ஆ.சரவணன், மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் குணசேகரன், செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் மாநில செய்தித்தொடர்பாளர் கனகசபாபதி பேசினார். தொடர்ந்து ஈரோட்டில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள், பிரமுகர்களை பா.ஜனதா குழுவினர் நேரில் சந்தித்தனர். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில் துறைக்கு அறிவித்து இருக்கும் சலுகைகள் குறித்து தனித்தனியாக எடுத்துக்கூறினார்கள். 370-வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்தும் அவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

Next Story