குன்னூர் ஏல மையத்தில் ரூ.9¼ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


குன்னூர் ஏல மையத்தில் ரூ.9¼ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 29 Sep 2019 10:15 PM GMT (Updated: 29 Sep 2019 10:22 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.9¼ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலையை அறுவடை செய்து, தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் தேயிலை ஏலம் நடை பெறுகிறது.

இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழக்கிழமை இலை ரக தேயிலைத்தூளும், வெள்ளிக்கிழமை டஸ்ட் ரக தேயிலைத்தூளும் ஏலம் விடப்படும். அதன்படி கடந்த 26, 27-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு 12 லட்சத்து 11 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 8 லட்சத்து 39 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 72 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 66 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 89 சதவீத விற்பனை ஆகும்.

விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.9 கோடியே 35 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில் ரூ.1 விலை உயர்வு ஏற்பட்டது. அதிகபட்ச விலையாக சி.டி.சி. தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.270, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.255 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.64 முதல் ரூ.75 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.116 முதல் ரூ.130 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.76 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.112 முதல் ரூ.126 வரையும் விற்பனையானது. அடுத்த ஏலம் வருகிற 3, 4-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் 16 லட்சத்து 26 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

Next Story