அன்னவாசல் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


அன்னவாசல் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Sep 2019 11:00 PM GMT (Updated: 30 Sep 2019 7:36 PM GMT)

அன்னவாசல் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட வயலோகம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கோகிலா என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவர் தற்போது தொடர் பணி விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வயலோகம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு, தற்காலிகமாக கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வில்லை எனவும், இதனால் அலுவலகம் திறக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சாதி, வருமானம், இருப்பிட சான்றுகளும், முதல் திருமண சான்று, முதல் பட்டதாரி சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்பட இணையம் வழியாக வழங்கப்படும் சான்றிதழ் வினியோகம் பெருமளவு முடங்கியுள்ளது. இதனால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆவதாக கூறி வயலோகம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பரபரப்பு

இதனையடுத்து வயலோகம் அருகே உள்ள புல்வயல் கிராம நிர்வாக அலுவலராக உள்ள ரமே‌‌ஷ் என்பவர் கூடுதல் பொறுப்பாக வயலோகம் கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து தனது பணியை தொடங்கினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story