திருவள்ளூர் அருகே பஸ்-ஷேர் ஆட்டோ நேருக்குநேர் மோதல்; 2 பேர் பலி 4 பேருக்கு தீவிர சிகிச்சை


திருவள்ளூர் அருகே பஸ்-ஷேர் ஆட்டோ நேருக்குநேர் மோதல்; 2 பேர் பலி 4 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 30 Sep 2019 11:00 PM GMT (Updated: 30 Sep 2019 7:39 PM GMT)

திருவள்ளூர் அருகே தனியார் பஸ் ஒன்று ஷேர் ஆட்டோ மீது நேருக்குநேர் மோதிய விபத்தில் பெங்களூரூவை சேர்ந்த 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுப்பட்டு பகுதியில் முஸ்லிம் அரபுக்கல்லூரி மற்றும் தர்கா உள்ளது. இதைப்பார்ப்பதற்காக நேற்று முன்தினம் பெங்களூரூவை சேர்ந்த நூருல்லாகான் (வயது 50), நதீம்அன்வர்(30), முகமதுகலீம் (58), சையத் ஆசில் (40), முக்தா (50) ஆகிய 5 பேர் வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அவர்கள் பெங்களூரூக்கு செல்வதற்காக அப்பகுதியில் நின்ற ஷேர்ஆட்டோவில் ஏறினர். ஷேர் ஆட்டோவை திருவள்ளூரை அடுத்த திருமணிக்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (50) என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த ஷேர் ஆட்டோ திருவள்ளூரை அடுத்த அகரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே கடம்பத்தூரில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் கம்பெனி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ஷேர்ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது.

இதில் அந்த ஷேர் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. மேலும் அந்த தனியார் கம்பெனி பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஷேர்ஆட்டோவில் பயணம் செய்த நூருல்லாகான், நதீம்அன்வர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், முகமது சலீம், சையத்ஆசில், முக்தா, ஷேர் ஆட்டோ டிரைவரான நாகராஜ் ஆகிய 4 பேரும் காயமடைந்து உயிருக்கு போராடினார்கள். அப்போது, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்கள் 4 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பஸ்சிலிருந்த தனியார் கம்பெனி பணியாளர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

Next Story