கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்று விட்டு நாடகமாடிய பெண் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்று விட்டு நாடகமாடிய பெண் கைது
x
தினத்தந்தி 1 Oct 2019 12:00 AM GMT (Updated: 30 Sep 2019 8:16 PM GMT)

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ஆள்வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து சாமியார் உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் மணிமுத்து(வயது 52). இவரது மனைவி பூமதி(46). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மணிமுத்து கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது காரைக்குடிக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் காரைக்குடி வந்தார். இந்த நிலையில் இரவில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து இருந்த மணிமுத்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி பூமதி, காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பூமதி மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பூமதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதில் போலீசார் சந்தேகமடைந்து, அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பூமதி ஆட்களை வைத்து தனது கணவரை கொலை செய்தது அம்பலமானது.

இதுகுறித்து மேலும் நடந்த விசாரணையில் பூமதிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த வேல்முருகன்(62) என்ற சாமியாருக்கும் பல வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, சாமியார் அடிக்கடி பூமதி வீட்டுக்கு வந்துள்ளார். பின்பு அவர்களிடையே நெருக்கமான பழக்கம் உண்டாகி, கள்ளத்தொடர்பாக நீடித்து வந்தது. இதை மணிமுத்து குடும்பத்தார் கண்டித்துள்ளனர். ஆனால் பூமதி கேட்கவில்லை. இதையடுத்து காரைக்குடி அருகே தேத்தாம்பட்டியில் சொந்த வீட்டில் வசித்து வந்த பூமதியின் குடும்பத்தை சாமியார் வேல்முருகன், காரைக்குடியில் வாடகை வீட்டிற்கு மாற்றியுள்ளார்.

அதைத்தொடர்ந்து சாமியார் வேல்முருகன், பூமதி சந்திப்பு அதிகமானது. இந்தநிலையில் திடீரென மணிமுத்து காரைக்குடி வந்துள்ளார். அவருக்கு சாமியார் குறித்து தெரியவந்ததும், மனைவியை கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பூமதி, சாமியாரிடம் கூறவும் அவர் மணிமுத்துவை மிரட்டி உள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபத்துடன் மணிமுத்து மொட்டை மாடிக்கு சென்று படுத்துவிட்டார். தகராறு குறித்து சாமியாரிடம், பூமதி கூறியதை தொடர்ந்து, இருவரும் சதித்திட்டம் தீட்டினர்.

அதைத்தொடர்ந்து சாமியார் வேல்முருகன், ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரை தன்னுடன் அழைத்துக்கொண்டு பூமதி வீட்டிற்கு வந்தார். அவர்களுக்கு கதவை திறந்து விட்ட பூமதி தனது கணவன் மேல் மாடியில் படுத்திருப்பதாக கூறவும், சாமியாரும் அவருடன் வந்த மற்ற 3 பேரும் மாடிக்கு சென்று பூமதியை விட்டு விலகி செல்லுமாறு மணிமுத்துவை மிரட்டினர். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காமல் அவர்களிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமியார் உள்பட 4 பேரும் சேர்ந்து மணிமுத்துவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். அதன் பின்பு பூமதி ஒன்றும் தெரியாதது போல் கணவரை யாரோ கொன்றுவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பூமதி உண்மையை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து பூமதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சாமியார் வேல்முருகனும் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(19) என்ற மயான ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story