நெல்லை அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் கைது


நெல்லை அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய 2 போலீஸ்காரர்கள் கைது
x
தினத்தந்தி 30 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 8:36 PM GMT)

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கியதாக 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாங்குநேரி,

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். நாகர்கோவில் ராணிதோட்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 50) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ்சில் பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ்காரர்கள் மகேஷ் (25), தமிழரசன் (25) ஆகிய 2 பேர் கூடங்குளத்திற்கு பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக ஏறி உள்ளனர். பஸ் நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது கண்டக்டர் ரமேஷ், அவர்களிடம் டிக்கெட் எடுக்க கூறியுள்ளார். அதற்கு அவர்கள் தங்களிடம் வாரண்ட் இருப்பதாகவும், சிறிது நேரத்தில் நிரப்பி தருகிறோம் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் அதை நிரப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேட்டபோது போலீஸ்காரர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர்கள் ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரமேஷ் காயமடைந்தார்.

உடனே பஸ்சை டிரைவர் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். அங்கு இதுகுறித்து ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், தமிழரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

காயம் அடைந்த ரமேஷ் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நாகர்கோவிலுக்கு சென்றார்.

இதற்கிடையே, போலீஸ்காரர்கள் 2 பேர் அளித்த புகாரின்பேரில், கண்டக்டர் ரமேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையொட்டி பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கண்டக்டரை, போலீஸ்காரர்கள் தாக்கிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story