கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கொடூர கொலை


கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கொடூர கொலை
x
தினத்தந்தி 30 Sep 2019 10:45 PM GMT (Updated: 30 Sep 2019 9:24 PM GMT)

போச்சம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்று குழி தோண்டி உடலை புதைத்த 5 பேரை போலீசார்வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொடூர கொலை குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். மேலும் அந்த பகுதியில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். பெரியசாமியும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பெரியசாமி தனது தந்தை ராமமூர்த்தி யுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பெரிய சாமிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார் (40) என்பவருக்கும் இடையே தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் பெரியசாமி திருவண்ணாமலையில் உள்ள செந்தில்குமார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பெரியசாமி தொப்பிடிகுப்பம் - கூச்சானூர் சாலையில் காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தை ராமமூர்த்தி போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

கடத்தப்பட்ட பெரியசாமிக் கும், திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சரண்யா (32) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர்கள் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இது செந்தில்குமாருக்கு தெரிய வரவே அவர் 2 பேரையும் கண்டித்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெரியசாமி, சரண்யாவை அழைத்துக் கொண்டு போச்சம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார்.

இது தொடர்பாக செந்தில்குமார் - பெரியசாமி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பெரியசாமியை தீர்த்து கட்ட செந்தில்குமார் முடிவு செய்தார். அதன்படி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெரியசாமியை காரில் கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது. மேலும், பெரியசாமியின் உடலை திருவண்ணாமலை மாவட்டம் காணிப்பாடி என்ற இடத்தில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போச்சம்பள்ளி போலீசார் அங்கு சென்று நேற்று உடலை தோண்டி எடுத்தனர். அதில் பெரியசாமி கல்லால் தாக்கப்பட்டும், மர்ம உறுப்பு நசுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை தாமரை நகர் செந்தில்குமார், மத்தூர் குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த சென்னப்பன் (35), திருவண்ணாமலை பார்வதி நகரை சேர்ந்த சரவணன் (50), திருவண்ணாமலை தாமரை நகர் ஜெயப்பிரகாஷ் (40), லட்சுமி நகர் செல்வம் (35) ஆகிய 5 பேர் மீது போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போச்சம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரரை காரில் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து உடலை புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story