தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை பணம், வெள்ளி பொருட்களையும் அள்ளிச்சென்றனர்


தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை பணம், வெள்ளி பொருட்களையும் அள்ளிச்சென்றனர்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:45 AM IST (Updated: 2 Oct 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தே.மு.தி.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜாரைச்சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 47). லாரி உரிமையாளரான இவர், தே.மு.தி.க. பிரமுகரும் ஆவார். இவர் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தனது சொந்த வீட்டின் முதல் மாடியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இதையடுத்து, இவர் தற்போது வீட்டை பூட்டி விட்டு தச்சூர் கூட்டுச்சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆரம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக நேற்று காலை ராஜேந்திரனின் உறவினர்கள் அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் அங்கு நேரில் விரைந்து சென்று பார்த்தபோது, நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அப்போது அங்கு தனியறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 50 பவுன் நகைகள், சுமார் 1 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை அள்ளிச்சென்றதும் உறுதியானது.

இது குறித்து ராஜேந்திரன் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் தலைமையிலான ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story