வேகத்தடைகளை, 3துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருசக்கர வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - கவர்னர் உத்தரவு


வேகத்தடைகளை, 3துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருசக்கர வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - கவர்னர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Oct 2019 11:30 PM GMT (Updated: 1 Oct 2019 11:29 PM GMT)

வேகத்தடைகள் இருக்கும் இடங்களை 3 துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து இருசக்கர வாகனங்களில் சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரான்ஸ் நாட்டில் இருந்து எனக்கு ஒரு இ.மெயில் வந்தது. அதில், “தமிழ் பேசும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் ஜெயந்தி என்பவர் அங்கிருந்து கடந்த மாதம் புதுச்சேரி வந்திருந்தார். தனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வந்திருந்த அவர் புதுவையில் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது தெரு விளக்கு இல்லாததால் சாலையில் இருந்த இருட்டினால் வேகத்தடை இருப்பதை காண முடியாமல் விபத்தை சந்தித்தார். இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அவர் ஹெல்மெட் அணிந்திருக்க வில்லை.

தலையில் காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் எந்திரம் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். ஆம்புலன்ஸ் கேட்ட போது அதற்கான டிரைவர் இல்லை. ஆட்டோ மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆக்சிஜன் வசதி, இடவசதி இல்லை என்று கூறி அனுமதிக்க மறுத்து விட்டனர்.

மேலும் அவர்கள் அங்கிருந்து வெளியே சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை என்று மறுத்துவிட்டனர். தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருந்ததாக கூறி சரியான சிகிச்சை தரவில்லை. எந்த தகவலும் தரவில்லை. எனவே அங்கு 48 மணி நேரம் காத்திருந்தும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

கடந்த மாதம் 17-ந் தேதி மருத்துவமனையில் தொடங்கி அவரது வாழ்க்கை 25-ந் தேதி முடிவடைந்தது. இறுதியில் அந்த பெண்ணின் சகோதரர் அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இருந்து அவரது சடலத்தை பெற முயன்றபோது அங்கு இருந்த பணியாளர் தொடங்கி வார்டு பாய் வரை பணம் கேட்டுள்ளனர். இது நாள் வரை அந்த குடும்பத்திற்கு மருத்துவ சான்று விவரங்கள் கிடைக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

முதலில் புதுச்சேரியில் உள்ள அனைத்து வேகத்தடைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். அது இரவு நேரத்தில் தெரியும் வகையில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் சாலையில் தெருவிளக்கு வசதியை மேம்படுத்த வேண்டும். புதுவை மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். பொதுப்பணித்துறை, போக்குவரத்து காவல்துறை, மின்துறை ஆகிய 3 துறைகளும் இந்த விஷயத்தில் ஆய்வு செய்து சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story