இடைத்தேர்தலில், தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


இடைத்தேர்தலில், தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 5:36 PM GMT)

இடைத்தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று கஞ்சனூரில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வெற்றி பெற்று விட்டது. மக்கள் தாங்கள் செய்த தவறை தற்போது உணர்ந்துள்ளனர். இந்த இடைத்தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தல். நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தேர்தல். நம்முடைய கூட்டணி வலுவான கூட்டணி. 2021-ல் நம்முடைய கூட்டணி மீண்டும் தமிழகத்தை ஆளப்போகிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் அச்சாரம். இத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது மட்டுமின்றி தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

நவம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அந்த தேர்தலிலும் நமது கூட்டணி தொடரும். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதே உற்சாகத்துடன் உள்ளாட்சி தேர்தலிலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம். உங்கள் சக்தியை நீங்கள் உணருங்கள், சோர்வை விலக்குங்கள்.

2011-ல் நடந்த தேர்தலில் இந்த ஆட்சி அமைய அடித்தளமிட்டது தே.மு.தி.க., அந்த நன்றியை நாங்கள் மறந்து விடவில்லை. எங்கேயும், எந்த இடத்திலும் உங்கள் தலைவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் பேசியது கிடையாது. தி.மு.க.வை போன்று, ஸ்டாலினை போன்று அ.தி.மு.க.வினர் தரம்கெட்டவர்கள் அல்ல. ஸ்டாலினை போன்று நன்றிகெட்டவர்கள் நாங்கள் அல்ல.

விஜயகாந்த் சிறந்த உழைப்பாளி. அவர் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போயிருப்பார். இந்த இடைத்தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டால் தமிழகத்தின் அழிவுக்கு நாமே இடம் கொடுத்து விட்டதாகும். இதில் நாம் வெற்றி பெறாவிட்டால் வருகிற உள்ளாட்சி தேர்தல், அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை நாம் சந்திக்க வேண்டியதுவரும்.

தொண்டர்களும், பாட்டாளிகளும் நிறைந்த கூட்டணி இந்த கூட்டணி. எங்களை யாராலும் பிரிக்க முடியாது. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட அவைத்தலைவர் கோவி.முருகன், பொருளாளர்கள் தயாநிதி, கருணாகரன், துணை செயலாளர் சூடாமணி, ஒன்றிய செயலாளர்கள் கோழிப்பட்டு குமார், ஜெயமூர்த்தி, மணி, ஞானசேகர், முருகன், விக்கிரவாண்டி நகர செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story