ரூ.2 ஆயிரம் கடனுக்காக என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் கைதான ஆட்டோ டிரைவர் மீது பெண் பரபரப்பு புகார்


ரூ.2 ஆயிரம் கடனுக்காக என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் கைதான ஆட்டோ டிரைவர் மீது பெண் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 6:42 PM GMT)

ரூ.2 ஆயிரம் கடனுக்காக தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக சேலத்தில் கைதான ஆட்டோ டிரைவர் மீது பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சேலம் ,

சேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர், பெண் ஒருவரை மிரட்டி பலாத்காரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனிடையே, காகாபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி அவர் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தநிலையில், எனது கணவர் யாரையும் மிரட்டி பலாத்காரம் செய்யவில்லை. வீடியோவில் இருப்பது எனது கணவர் இல்லை எனவும், இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும், தவறான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் மனைவி பரிமளா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார்.

இந்தநிலையில், தலைமறைவாக இருந்த பாதிக்கப்பட்ட அந்த பெண், நேற்று முன்தினம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், நான் ஹாலோ பிரிக்ஸ் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தேன். ஒருநாள் பணம் இல்லாமல் சிரமப்பட்டபோது, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கினேன். அந்த பணத்தை கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் மோகன்ராஜ் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார்.

ஒருநாள் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அப்போது, என்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறினேன். அதற்கு பணம் தர வேண்டாம் என்றும், வீட்டிற்கு வந்துவிட்டு செல்லுமாறும் கூறினார். அதனை நம்பி நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர், எனது நெற்றியில் அடித்தார். பிறகு கொன்று விடுவதாக மிரட்டி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துவிட்டார். மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து அதனை வைத்து மிரட்டினார். நான் அழைக்கும்போது வரவில்லை என்றால் அந்த பலாத்காரம் செய்யும் வீடியோவை வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டினார். எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம் செய்தல், ஆபாச படம் எடுத்து மிரட்டல், ஆபாசமாக பேசுதல், அடைத்து வைத்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனால் ஏற்கனவே சிறையில் உள்ள அவரை, இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Next Story