காந்தி உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மரியாதை கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்


காந்தி உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மரியாதை கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 7:35 PM GMT)

அரியலூரில் காந்தி பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் கல்லங்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

அரியலூர்,

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள கதர் அங்காடி வளாகத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கதர் அங்காடி வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் ஆண்டு முழுவதும் அனைத்து கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் கதர் விற்பனை நிலையத்தின் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிக அளவு கதர் ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வு சிறக்க அனைவரும் உதவிட வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர தவணை முறையில் கதர் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்விற்பனையினை அரசு ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன் (செய்தி), எழிலரசன் (விளம்பரம்) மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

காந்தி பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கல்லங்குறிச்சி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர்களாக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினய், ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். பொருட்கள் வாங்க செல்லும் போது நாம் துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும். நீர் ஆதாரங்களை பெருக்க அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றார்.

மேலும் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. 2019-20-ம் நிதியாண்டு வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டது. நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் குடிமராமத்து பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில், கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு துணிப்பைகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

இதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள கீழகுளத்தூர், திருமழபாடி, கண்டிராதித்தம், மஞ்சமேடு, திருமானூர் உள்ளிட்ட 35 பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் திருமானூர், கீழகுளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உதவி திட்ட அலுவலர் சித்ரா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், நாராயணன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வி ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதில் கலந்து கொண்ட அனைவரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உடையார்பாளையம் அருகே தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தனி அலுவலர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். இதேபோல் இடையார், கட்சிபெருமாள், துளாரங்குறிச்சி, கழுமங்கலம் ஆகிய கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார்.

காந்தி பிறந்தநாளை யொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டு மதிய உணவு உட்கொண்டனர்.

இதில் உதவி கலெக்டர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) கதிர்சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் கதிரவன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story