குமாரபாளையத்தில் தபால் நிலைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


குமாரபாளையத்தில் தபால் நிலைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 9:08 PM GMT)

குமாரபாளையத்தில், தபால் நிலைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகருக்குள்ளேயே செயல்படக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம்,

குமாரபாளையம் நகரின் மையப்பகுதியில் ஜே.கே.கே. ரோட்டில் வாடகை கட்டிடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக இங்கு பல ஆண்டு காலமாக இயங்கி வந்த தபால் நிலைய கட்டிடத்திலும், மின் ஒயரிங்கிலும் பழுது ஏற்பட்டது. இதையடுத்து இங்கு தபால் நிலையம் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக போஸ்ட் வங்கி இணையதள சேவையும் செயல்படவில்லை.

இதனால் தபால் நிலைய ஆவணங்கள், கருவிகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தபால் நிலைய அதிகாரிக்கு ஏற்பட்டது. இதையடுத்து இந்த தபால் நிலையம் கடந்த ஒரு வாரமாக குமாரபாளையம் நகரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள எதிர்மேடு வட்டமலை பகுதியில் இயங்கி வந்த கிழக்கு தபால் அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நேற்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தபால் நிலைய அலுவலகம் முன்பு கூடினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்த தபால் நிலைய அலுவலக அதிகாரியிடம், குமாரபாளையம் தலைமை தபால் நிலையத்தை ஊருக்குள்ளேயே கட்டிடம் பார்த்து இங்கேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.பின்னர் குமாரபாளையத்தில், தபால் நிலைய இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகருக்குள்ளேயே செயல்படக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மக்கள் நீதி மய்யம், நம்ம குமாரபாளையம் அமைப்பு, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போஸ்ட் மாஸ்டர், நாமக்கல் மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளிடம் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் விரைவில் நகருக்குள் அனைத்து மக்களும் வந்து செல்ல வசதியான இடத்தில் தபால் அலுவலகம் மாற்றி கொண்டு வரப்படும் என குமாரபாளையம் போஸ்ட் மாஸ்டர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Next Story