எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2019 11:15 PM GMT (Updated: 3 Oct 2019 6:44 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு(வயது 40). பைபர் படகு உரிமையாளர். நேற்று முன்தினம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து ராமுவின் பைபர் படகில் ராமு மற்றும் அதே ஊரை சேர்ந்த கஜேந்திரன், வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஜெயராமன் ஆகிய 4 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்தனர்.

பின்னர் அவர்கள் படகில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நெடுந்தீவு அருகே அவர்கள் வந்து கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்களையும், படகையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

மீட்க கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story