செஞ்சி அருகே விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன் பலி


செஞ்சி அருகே விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன் பலி
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 6:59 PM GMT)

செஞ்சி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செஞ்சி,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சே.அகரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 45). எலக்ட்ரீசியன். இவருக்கு யுவராஜ் (14) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க யுவராஜ் மற்றும் தனது தம்பி மகனான ஜனா(13) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்றார்.

அப்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்பாப்பாம்பாடி ஏரிக்கரை பகுதியில் செல்லும் போது முன்னால் சென்ற லாரியை முந்தி சென்றனர். அப்போது எதிரே பஸ் ஒன்று வந்தது. இதை பார்த்ததும், ஏழுமலை தனது மோட்டார் சைக்கிளை இடது பக்கமாக திருப்பினார். இதில் நிலைதடுமாறிய அவர், லாரிக்கு அடியில் விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவர்கள் மீது ஏரி இறங்கியது.

இதில் ஏழுமலை, யுவராஜ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜனா பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, ஜனாவை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story