புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 5 Oct 2019 10:30 PM GMT (Updated: 5 Oct 2019 9:06 PM GMT)

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தா.பேட்டை,

திருச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி சிறுகனூர் அருகே உள்ள 94கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள பழமையான ராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி ராமர்-சீதா தேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து ராமர்-சீதா பாதத்தில் வைக்கப்பட்ட 7 தேங்காய்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. அவற்றை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

ரூ.21 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.8 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மொத்தம் 7 தேங்காய்களும் ரூ.21 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இரவில் கருடசேவை நடைபெற்றது. இதையொட்டி கருட வாகனத்தில் ராமர்- சீதா, பரிவார தேவதைகளுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

கருட வாகனம்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டி ஆதிநாயக பெருமாள் கோவிலிலும் நேற்று காலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இரவில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தா.பேட்டையை அடுத்த நீலியாம்பட்டி தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திரபெருமாள் கோவில், அடிவாரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில், தா.பேட்டையில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில், பிள்ளாபாளையம் நரசிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தளுகைபூஜை நடத்தி அன்னதானம் வழங்கினர்.

Next Story