25 ஆண்டுகளுக்கு பிறகு காவல்கிணறில் 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே உத்தரவு


25 ஆண்டுகளுக்கு பிறகு காவல்கிணறில் 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே உத்தரவு
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 9:35 PM GMT)

25 ஆண்டுகளுக்கு பிறகு காவல் கிணறு ரெயில் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி முதல் ரெயில்கள் நின்று செல்லும்.

நாகர்கோவில்,

நாகர்கோவில்- நெல்லை ரெயில்வே வழிதடத்தில் உள்ள காவல்கிணறில் ரெயில் நிலையம் இயங்கி வந்தது. ஆனால் இந்த ரெயில் நிலையத்தால் ரெயில்வே துறைக்கு போதிய வருமானம் இல்லை என்று கூறி 1994-ம் ஆண்டு ரெயில் நிலையம் மூடப்பட்டது. ஆனால் தற்போது காவல்கிணறை சுற்றியுள்ள பகுதிகள் நன்கு முன்னேறி உள்ளன. இதனால் ஏராளமான பயணிகள் பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

எனவே மூடப்பட்ட ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காவல் கிணறு ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதாவது அக்டோபர் 10-ந் தேதி முதல் ரெயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 4 பயணிகள் ரெயில்கள் காவல் கிணறு ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரெயில்களை காவல் கிணறு வரை நீட்டிப்பு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 ரெயில்கள் நின்று செல்லும்

இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காவல் கிணறு ரெயில் நிலையத்தில் 4 பயணிகள் ரெயில்கள் நின்று செல்லும். அதாவது நாகர்கோவில்- கோவை ரெயில் (காலை 7.30), நெல்லை- நாகர்கோவில் ரெயில் (காலை 7.53), கன்னியாகுமரி- நெல்லை ரெயில் (மாலை 6.59), கோவை- நாகர்கோவில் ரெயில் (இரவு 7.23) ஆகிய பயணிகள் ரெயில்கள் நின்றும் செல்லும். ரெயில் நிலையத்தின் கோடு கே.வி.எல்.கே. ஆகும். பயணிகளின் வருகையை பொருத்து பிற ரெயில்களையும் நிறுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்“ என்றார். 

Next Story