சேலத்தில் பிரபல ரவுடி தீக்குளிப்பு போலீஸ் நிலையத்துக்குள் ஓடியதால் பரபரப்பு


சேலத்தில் பிரபல ரவுடி தீக்குளிப்பு போலீஸ் நிலையத்துக்குள் ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 10:16 PM GMT)

சேலத்தில் பிரபல ரவுடி நேற்று இரவு தீக்குளித்தார். அப்போது அவர் நெருப்புடன் போலீஸ் நிலையத்துக்குள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 39), பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்தநிலையில் சேலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் ரவுடிகளை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சிலம்பரசனையும் போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் சிலம்பரசன் நேற்று இரவு கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே வந்தார். பின்னர் அவர் தனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதையடுத்து அவர் நெருப்புடன் திடீரென போலீஸ் நிலையத்துக்குள் ஓடினார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவருடைய உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் சிலம்பரசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி தீக்குளித்து விட்டு போலீஸ் நிலையத்துக்குள் ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story