வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 15–ந் தேதி வரை நீட்டிப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்


வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 15–ந் தேதி வரை நீட்டிப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2019 10:45 PM GMT (Updated: 8 Oct 2019 11:00 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகிற 15–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறிஇருப்பதாவது;–

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியானது வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர், வயது, பாலினம், கணவர் அல்லது தந்தை பெயர், புகைப்படம் ஆகியவற்றில் பிழைகள் ஏதும் இருந்தால் அந்த வாக்காளர்கள் தாமாகவே www.nvsp.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து சரிசெய்யலாம். மேலும் வாக்காளர் உதவி மையம் என்ற செல்போன் செயலி மூலம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை செல்போன் மூலமாக பதிவு செய்யலாம். இதனை தவிர 1950 என்ற இலவச எண்ணில் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், அனைத்து தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டு உள்ள வாக்காளர் சேவை மையங்கள் மற்றும் இ–சேவை மையங்களில் திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story