திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: திருவாரூரில், மேலும் 2 பெண்களிடம் போலீசார் விசாரணை


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: திருவாரூரில், மேலும் 2 பெண்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2019 10:15 PM GMT (Updated: 8 Oct 2019 6:45 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக திருவாரூரில் மேலும் 2 பெண்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

திருவாரூர்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த 2-ந் தேதி அதிகாலை கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின்புறமுள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்த காட்சி கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

கொள்ளை சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையின்போது திருச்சி நெ.1.டோல்கேட் அருகே கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த அதே கும்பல் தான் லலிதா ஜூவல்லரியிலும் புகுந்து கைவரிசை காட்டி இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

5 கிலோ நகைகள் பறிமுதல்

இந்த நிலையில் கொள்ளை நடந்த மறுநாள் இரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகைகளில் இருந்த பார்கோடுகளை ஆய்வு செய்து அவை திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சி நகைக்கடையில் நடந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டது பிரபல கொள்ளையனான திருவாரூரை சேர்ந்த முருகன் என்பதும், முருகனின் அக்காள் மகன் சுரே‌‌ஷ், மணிகண்டன் உள்பட 8 பேர் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.

இதையடுத்து திருவாரூரில் உள்ள முருகனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணையை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வருகிறார்கள்.

8-வது நாளாக நீடித்தது

கொள்ளை போன 30 கிலோ நகையில் 5 கிலோ மட்டுமே இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை நேற்று 8-வது நாளாக நீடித்தது. திருவாரூர் முருகன் பிடிபட்டால் தான் எஞ்சியுள்ள நகைகளை மீட்க முடியும் என்பதால் அவரை பிடிப்பதற்கு போலீசார் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதுதொடர்பாக மாரியப்பன், ரவி, குணா, பார்த்திபன் மற்றும் முருகனின் அண்ணன் மகன் முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூரில் கடந்த 7-ந் தேதி கைது செய்யப்பட்ட முரளியிடம் பெற்ற தகவலின் பேரில் முருகனின் உறவினர் பிரதாப் என்பவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

2 பெண்களிடம் விசாரணை

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் பிரதாப்பின் தாய் ராஜேஸ்வரி, மாரியப்பனின் தாய் அமுதா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறுகிறார்கள்.

ஆனாலும் முருகன் எங்கு இருக்கிறார்? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே? என்பது குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Next Story