முகவரி கேட்பது போல் நடித்து உருக்காலை ஊழியர் வீட்டில் 9¾ பவுன் நகை திருட்டு


முகவரி கேட்பது போல் நடித்து உருக்காலை ஊழியர் வீட்டில் 9¾ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Oct 2019 10:15 PM GMT (Updated: 8 Oct 2019 9:56 PM GMT)

சேலத்தில் முகவரி கேட்பது போல் நடித்து உருக்காலை ஊழியர் வீட்டில் 9¾ பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சூரமங்கலம், 

சேலம் உருக்காலையில் உள்ள மோகன்நகரில் உருக்காலைக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் குணசீலன். இவர் உருக்காலையில் சீனியர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கீதாலட்சுமி (வயது 39). நேற்று முன்தினம் இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயதுடைய மர்ம ஆசாமி ஒருவர் கீதாலட்சுமியிடம் அந்த பகுதியில் உள்ள முகவரி குறித்து விசாரித்துள்ளார்.

உடனே கீதாலட்சுமி அந்த முகவரியை கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார். பின்னர் அவர் மாடிக்கு சென்று காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்.

அப்போது அங்கு பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த 9¾ பவுன் நகை திருட்டு போயிருந்தது. இதையடுத்து தான் அவருக்கு, முகவரி கேட்பது போல் மர்ம ஆசாமி நடித்து வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மர்ம ஆசாமி முகவரி கேட்பது போல் நடித்து வீட்டுக்குள் புகுந்து நகை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story