பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 2:55 PM GMT)

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தினமும் 200-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெங்குவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தினமும் ஏராள மானோர் வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு சீட்டு பெற்று மருத்துவர்களை பார்க்கின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, அரசு மருத்துவ மனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம்பேர் வருகின்றனர். நாள் ஒன்றுக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 3 நாட்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் சரியாக வில்லையென்றால், அவர் களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிகுறி இருப்பது தெரிய வந்தால் அந்த நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் மருத்துவமனை வளாகத்தில் சித்தா பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு வலையுடன் கூடிய 8 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதில் காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை உள்நோயாளியாக அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றனர். தற்போது அந்த தனிவார்டில் மலேரியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Next Story