டி.என்.பாளையம் அருகே டிராக்டர்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல்


டி.என்.பாளையம் அருகே டிராக்டர்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 6:29 PM GMT)

பெரும்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ள அனுமதிக்காததை கண்டித்து டி.என்.பாளையம் அருகே டிராக்டர்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.என்.பாளையம்,

டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையத்தில் பெரும்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அணையில் இருந்து டிராக்டர்களில் வண்டல் மண்ணை அள்ளி சென்றனர்.

இந்த நிைலயில் நேற்று 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வண்டல் மண் எடுக்க பெரும்பள்ளம் அணைக்கு சென்றன. ஆனால் அணையில் வண்டல் மண் எடுக்க பொதுப்பணித்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும் அணைக்கு செல்லும் வழியில் இருந்த கேட்டையும் பூட்டினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கே.என்.பாளையம்- சத்தி ரோட்டில் உள்ள நால்ரோடு பகுதியில் தங்களுடைய டிராக்டர்களை மதியம் 12 மணி அளவில் ரோட்டின் குறுக்கே நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மோகன்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், ‘பெரும்பள்ளம் அணையில் வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி நாளை (அதாவது இன்று) வரை உள்ளது. ஆனால் வண்டல் மண் அள்ள பொதுப்பணித்துறையினர் அனுமதிக்கவில்லை. எனவே எங்களை வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘அணையில் வண்டல் மண் எவ்வளவு அள்ளப்பட்டு உள்ளது. இனி எந்த இடத்தில் இருந்து மண் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறித்து நானள மறுநாள் 11-ந் தேதி (அதாவது நாளை) ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் வண்டல் மண் அள்ளுவது குறித்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு 1 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story