மண்ணிவாக்கத்தில் உணவு குடோனில் தீ விபத்து; ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்


மண்ணிவாக்கத்தில் உணவு குடோனில் தீ விபத்து; ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 6:47 PM GMT)

மண்ணிவாக்கத்தில் உணவு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அடுத்த கரசங்கால் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 31). இவர் மண்ணிவாக்கம் சண்முகா நகரில் உணவுப்பொருட்கள் குடோன் வைத்துள்ளார். உணவுப் பொருட்களை சில்லரையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது குடோனில் இருந்து கரும்புகை வெளிவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீப்பற்றி எரிய தொடங் கியது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனால் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் குடோனில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.

இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story