தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அனைத்து தொழிலாளர்களுக்கும் நிலுவை சம்பளம், போனஸ் வழங்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்


தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அனைத்து தொழிலாளர்களுக்கும் நிலுவை சம்பளம், போனஸ் வழங்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 6:59 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக அனைத்து தொழிலாளர்களுக்கும் நிலுவை சம்பளம், போனஸ் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான அஜீஸ் பாஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை, காமராஜ் நகர் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதுச்சேரி அரசு டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சன்டே மார்கெட் வியாபாரத்தை காந்தி வீதியில் இருந்து அரசு இடமாற்றம் செய்யக்கூடாது.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக அனைத்து தொழிலாளர்களுக்கும் நிலுவை சம்பளம், போனஸ் வழங்க வேண்டும்.

ஏ.எப்.டி., பாரதி, சுதேசி பஞ்சாலைகளை லாபகரமாக இயக்க உயர்மட்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட வேண்டும்.

அரசுதுறைகளில் காலியாக உள்ள 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதால் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story