சேரன்மாதேவியில் பயங்கரம்: காதல் மனைவி அடித்துக்கொலை - கணவர் போலீசில் சரண்


சேரன்மாதேவியில் பயங்கரம்: காதல் மனைவி அடித்துக்கொலை - கணவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:00 PM GMT (Updated: 9 Oct 2019 8:28 PM GMT)

சேரன்மாதேவியில் காதல் மனைவி அடித்துக்கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

சேரன்மாதேவி, 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி மேல கண்டளவு தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 32). இவர் நெல்லையில் உள்ள மோட்டார்சைக்கிள் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர், அதே ஊரில் உள்ள ஆலடி மணிநகர் தெருவை சேர்ந்த பெருமாள் மகள் நிர்மலா (30) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீநிதி (6) என்ற மகளும், பிறந்து 10 மாதங்களே ஆன நரேன் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

பாரதிராஜா தினமும் நெல்லைக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவிலும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை 5 மணி அளவிலும் அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா, நிர்மலாவை சரமாரியாக அடித்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதில் தரையில் விழுந்த நிர்மலா பேச்சுமூச்சு இன்றி கிடந்தார். இதனால் அவர் மயக்கமுற்று இருப்பதாக பாரதிராஜா நினைத்தார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவரது முகத்தில் கைவைத்து பார்த்தபோது, நிர்மலா இறந்து போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா அங்கிருந்து தப்பிச் செல்லாமல் காலை 7 மணி அளவில் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண்டைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாரதிராஜாவை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story