திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகன் தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகன் தங்கி இருந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 10 Oct 2019 11:15 PM GMT (Updated: 10 Oct 2019 5:41 PM GMT)

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் தங்கி இருந்த வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த முருகன்(வயது 45), அவரது அக்காள் மகன் சுரேஷ்(28) உள்பட 8 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

முருகன் மீது ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்படும்போதெல்லாம் ஜாமீனில் வெளியே வரும் முருகன் அதன்பிறகு தலைமறைவாகி விடுவதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன்(34), சுரேசின் தாய் கனகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து முருகனையும், சுரேசையும் ேதடி வந்தனர்.

இந்தநிலையில் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டத்்தில் செங்கம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் கோர்ட்டு உத்தரவை பெற்ற, சுரேசை திருச்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிய வாய்ப்பு இருக்கிறது. இதனால் திருச்சி தனிப்படை போலீசார் திருவண்ணாமலை விரைந்துள்ளனர். சுரேசை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே முருகன் பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. முருகன் கொள்ளையடிப்பதற்கு முன்பு பல்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும், அங்கு கொள்ளையை முடித்துவிட்டால் வீட்டை அப்படியே விட்டு, விட்டு தலைமறைவாகி விடுவதும் தெரியவந்தது.

அதுபோல் திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் அருகே நருங்குழிநகர் என்ற பகுதியில் முருகன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை வேங்கூருக்கு சென்ற போலீசார் அங்கு முருகன் தங்கி இருந்ததாக கூறப்பட்ட வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

அதே பகுதியை சேர்ந்த ஷேக்அப்துல்கபூர் என்பவருக்கு சொந்தமான வீட்டை முருகன் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ரூ.6 ஆயிரம் மாத வாடகைக்கு எடுத்து மனைவி மஞ்சுளா மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தாகவும், அந்த வீட்டில் முருகனின் வளர்ப்பு நாயும் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 27-ந் தேதி முருகன் குடும்பத்தினரை அங்கிருந்து காரில் அழைத்து சென்று வெளியூரில் விட்டுள்ளார். பின்னர் 1-ந் தேதி அங்கிருந்து புறப்பட்ட அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கடந்த 2-ந் தேதி அதிகாலையில் தான் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story