தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரி வழக்கு மத்திய-மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 10:00 PM GMT)

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகழாய்வு நடத்தக்கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் வெளிப்பாடாக தற்போது கீழடியில் ஏராளமான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல் ஆதிச்சநல்லூரிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் நாகரிகமாக வாழ்ந்ததற்கான பல்வேறு வரலாற்று சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுபோன்ற வரலாற்று சான்றுகள் தமிழர்களின் நாகரிகம் மற்றும் பண்பாடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. எனவே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராஜவள்ளிபரம்பு, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம் பரம்பு, வடக்கு வல்லநாடு, அகரம், முறப்பநாடு, திருப்புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம், குறும்பூர், நல்லூர், கொற்கை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம் உள்ளிட்ட 32 இடங்களிலும், கீழடியை அடுத்த கொந்தகையிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தேன்.

இதே போல் சிவகளையில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நாகரிகமான முறையில் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அங்கெல்லாம் விரிவான அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் தமிழர்களின் தொன்மையான வரலாறு உலக அளவில் நிரூபிக்கப்படும். எனவே தாமிரபரணி ஆற்றங்கரை, கொந்தகை, சிவகளையில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story