சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளி கருகி சாவு


சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளி கருகி சாவு
x
தினத்தந்தி 11 Oct 2019 11:15 PM GMT (Updated: 11 Oct 2019 2:13 PM GMT)

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி கருகி உயிரிழந்தார்.

சிவகாசி,

சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 90 அறைகள் உள்ளன. இதில் 120 பேர் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அறை எண் 87–ல் தரைச்சக்கரம் வகை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த அறையில் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 56) என்பவர் தரைச்சக்கரம் வகை பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். காலை 9.20 மணிக்கு திடீரென முத்துப்பாண்டி பணியில் ஈடுபட்டிருந்த அறையில் வெடி சத்தம் கேட்டுள்ளது. அந்த அறை முழுவதும் தீப்பரவி கட்டிடம் இடிந்து விழுந்தது. உடனே மற்ற அறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு பட்டாசு ஆலையில் இருந்து வெளியேறினர்.

பின்னர் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் இடிபாடுக்குள் சிக்கி கருகி இறந்து கிடந்த தொழிலாளி முத்துப்பாண்டியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி உதவி–கலெக்டர் தினேஷ்குமார், சிவகாசியில் உள்ள மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பாண்டே, அமித்கோயல், பிரவேஸ்குமார், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை ஆய்வு தனி தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து எப்படி நடந்து என்பது குறித்து ஆலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். சிவகாசி கிழக்கு போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்துள்ளனர்.

Next Story