கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு


கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 3:49 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே சீரான மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள ஏனாதிமேல்பாக்கம் காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளாக சீரான மின்வினியோகம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது.. இது குறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டங்களில் இந்த பகுதி மக்கள் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது மட்டுமன்றி குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து தங்களுக்கு சீரான மின்சாரம் வழங்கக்கோரி சமூக ஆர்வலர் குமார் தலைமையில் நேற்று அந்த வழியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி நோக்கி வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஊரக பிரிவு மின்துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அதிகாரி சாமிநாதன், ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி செயலாளர் அரிபாபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஏனாதிமேல்பாக்கம் காலனியில் மின்வினியோக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய மின்மாற்றி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்தார். இதனையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story