பேட்டரி -மின்சார கார்களை இயக்குவதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் - ஈரோட்டில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் பேட்டி


பேட்டரி -மின்சார கார்களை இயக்குவதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் - ஈரோட்டில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 7:00 PM GMT)

பேட்டரி மற்றும் மின்சார கார்களை இயக்குவதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று ஈரோட்டில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் கூறினார்.

ஈரோடு,

சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மோசமான நிலையில் உள்ளது. இந்த பஸ்களை பழுது பார்க்காமல், மின்சார கார், பேட்டரி கார்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த வகையான பஸ்கள் ரூ.2 கோடிக்கு மேல் விலை உடையவை.

இந்த விலையில் 6 சாதாரண பஸ்களை வாங்கலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது கடமை என்றாலும், இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டி அவசியம் என்ன என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மேலும் இந்த நடவடிக்கையால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இதுபோன்ற நடவடிக்கையால், தனியார் மயத்தை ஊக்குவிப்பதும், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதும் அரசின் நோக்கமாக உள்ளது.

ெரயில்வே துறையைப்போல அரசு போக்குவரத்து கழகத்திலும் தனியார் மயமும், அரசு ஊழியர்களை வெளியேற்றும் செயல்களும் நடந்து வருகிறது. போக்குவரத்து கழக செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் 6 மாதங்களுக்குள் வேறு துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதுபோன்ற துறையில், ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால்தான், அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும். ெரயில்வே, போக்குவரத்து கழகம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சேலம் உருக்காலை, பாதுகாப்பு துறை நிறுவனங்கள் என அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதும், தொழிலாளர்களை வெளியேற்றுவதும் கண்டனத்துக்கு உரியது.

இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் தனியார் மயமாக்குதலை கண்டித்து வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்.

மேலும் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி, தேசிய அளவிலான தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று நடக்கும், அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொழிற்சங்கங்களும் பங்கேற்க உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story