கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் சிக்கியது இலங்கை பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை


கொழும்பில் இருந்து கடத்தல்:  சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் தங்கம் சிக்கியது இலங்கை பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 7:54 PM GMT)

கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.36¾ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணியாக வந்து இறங்கிய இலங்கையை சேர்ந்த சிவக்குமார் பழனியாண்டி (வயது 38) என்பவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 525 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.

பெண் சிக்கினார்

அதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சகாய மேரி (35) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, துணிகளுக்கு இடையில் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்க கட்டிகளையும் சேர்த்து ரூ.17 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 448 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இந்தநிலையில், 2 பேரிடமும் இருந்து ரூ.36 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 973 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story