வேளாண்மைத்துறை மூலம் 64,470 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியில் வேளாண் இடுபொருட்கள்-உபகரணங்கள் - கலெக்டர் தகவல்


வேளாண்மைத்துறை மூலம் 64,470 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியில் வேளாண் இடுபொருட்கள்-உபகரணங்கள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 8:17 PM GMT)

வேளாண்மைத்துறை மூலம் 64 ஆயிரத்து 470 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 10 லட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருட்கள்- உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம், 

தமிழக அரசின் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2016-17-ம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 ஆயிரத்து 360 எக்டேரில் செயல்விளக்கங்கள், வீரிய ஒட்டுநெல் வினியோகம், விதை வினியோகம், களைக்கொல்லி மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் வினியோகம் ஆகியவை ரூ.2 கோடியே 92 லட்சம் மானியத்தில் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 17 ஆயிரத்து 365 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் 1,315 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள், பம்ப்செட்டுகள், ரோட்டோவேட்டர்கள், கோனோவீடர்கள், நீர் எடுத்து செல்லும் குழாய்கள் என வேளாண் எந்திரங்கள் ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் வினியோகிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 20 எச்.பி.க்கு மேல் திறன் கொண்ட 20 டிராக்டர்கள் ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தில் வினியோகிக்கப்பட்டு, 20 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2017-18-ம் ஆண்டில் 22 ஆயிரத்து 760 விவசாயிகளுக்கு செயல்விளக்கங்கள், வீரிய ஒட்டுநெல் வினியோகம், விதை வினியோகம், களைக்கொல்லி மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஜிப்சம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் வினியோகம் என ரூ.2 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் மானியத்திலும், 790 விவசாயிகளுக்கு ரூ.83 லட்சத்து 25 ஆயிரத்தில் வேளாண் கருவிகளும் வினியோகிக்கப்பட்டுள்ளன. 2018-19-ம் ஆண்டில் 19 ஆயிரத்து 840 விவசாயிகளுக்கு செயல்விளக்கங்கள், வீரிய ஒட்டுநெல் வினியோகம், விதை வினியோகம், களைக்கொல்லி மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் வினியோகம் ஆகியவை ரூ.2 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் மானியத்திலும், 2 ஆயிரத்து 380 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களும் ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நாகை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் கடந்த 2016-19-ம் ஆண்டு வரை 64 ஆயிரத்து 470 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story